Friday 3 April 2015

சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள் & அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!

தமிழ் ஜோதிட தந்தை வீரராகவ அய்யங்கார்



ஒரு சூரியன் ஆயிரம் கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனி பகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார். அதனாலேயே சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கும் ஒரு கிலி. அது தேவை இல்லாதது என்பதே ஜோதிட உண்மை.

ஜய வருடம் மார்கழி மாதம் 1-ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 44 நிமிடத்திற்கு சனிப்பெயர்ச்சி நிகழ் பெற்றது.

இப்போது சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

சனீஸ்வரரை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. உண்மையில் அவர் தரும் தொல்லைகளை விட நன்மைகள் அதிகம். கீழ் குறிப்பிட்டுள்ள சனி காயத்ரி ஸ்லோகத்தை தினமும் உச்சரிப்பதின் மூலம் அனைத்து நன்மைகளையும் உங்களுக்கு சனீஸ்வரர் வழங்குவார். இந்த சனி பெயர்ச்சி மூலம் சனீஸ்வரர் நம்மிடம் எதிர்பார்ப்பது, கடவுளின் குழந்தைகளான விலங்கு மற்றும், பறவைகளுக்கு  (அதாவது நாய், பூனை, மாடு, காகம், குருவி போன்ற ஜீவராசிகள்) உணவளிப்பது, ஏழை, எளியவர்களுக்கு உதவுவது, நல்ல மனதுடன், யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருப்பது என்பதே. இதை செய்தால் சனீச்வர பகவானின் பூரண ஆசியை பெற்று உங்களுக்கு நல்லது நடக்க போவதை நீங்களே கண்கூடாக பார்க்க போகிறீர்கள் என்பதே ஜோதிட உண்மை.

சனீச்வர காயத்ரி
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்”

இனி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களின் சனி பெயர்ச்சி மற்றும் 2015 ஆண்டு பலன்களை பார்ப்போமா!



அன்புக்குரிய மேஷ ராசி வாசகர்களே

65% நல்லதே நடக்கும்: கஷ்டங்கள் போகும், விரயங்கள் தீரும். கடன் குறையும். பாக்கியம் சேரும்...

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப் போகிறார். அஷ்டம சனியாக வரும் அவர், இனி உங்கள் கஷ்டங்களை போக்க போகிறார். “அஷ்டம சனி வந்தால் அவஸ்தை என்று பலர் கூறுவார்கள். ஆனால் குருவின் பலத்தால், அதாவது விசாக நட்சத்திரத்தில் வரப் போவதால், அஷ்டமசனியின் பாதிப்பு வராது. இராசிக்கு 09-12-க்குரியவனின் ஆதிக்கத்தில் வருவதால், விரயங்கள் தீரும். கடன் குறையும். பாக்கியம் சேரும். உழைப்பு அதிகம் இருக்கும். யாத்திரை-தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடக்கும். சனி 2-ம் இடம், 5-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்வதால், பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. வீண் செலவுகளை நீங்கள் தான் திட்டமிட்டு குறைக்க வேண்டும். பூர்வீக சொத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் தேவை. தடைப்பட்ட கல்வி தொடரும். வேலை வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். வழக்கு தொல்லை விடுதலை ஆகும். வீடு, மனை, வாகனம் அமையும். அரசாங்க ஆதரவு கிட்டும். சொந்த தொழில் துவங்க வாய்ப்பும் அமையும். பொதுவாக, அஷ்டம சனி ஆட்டி படைக்காது கவலை வேண்டாம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும். சனிப்பெயர்ச்சி அன்றோ அல்லது உங்களின் பிறந்தநாள் அன்றோ நீல வர்ண வஸ்திரத்தை ஒருவருக்காவது தானம் செய்யுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

பாசத்தோடு பழகி, பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளும் மேஷ ராசி வாசகர்களே!

ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்து விட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்ற படி பணவரவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விடுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்  மற்றும் பரிகாரம்: சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். பழனி முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யுங்கள், சிக்கல் தீரும்.

அன்புக்குரிய  ரிஷப  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

70% நல்லதே நடக்கும்: எதிர்பாராத யோகம், கணிசமான பண வரவு,  கூட்டாளிகளால் நன்மை...

சனி பகவான் உங்கள் இராசிக்கு, 7-ம் இடத்திற்கு அதாவது சப்தம ஸ்தானத்திற்கு வரப் போகிறார். பொதுவாக சப்தம ஸ்தானம், ரிஷப இராசிக்கு யோக ஸ்தானம். 10-க்குரிய சனி, 7-ல் வருவது எதிர்பாரா யோகத்தை தரும். ரிஷப இராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி பகவான் யோகத்தையே செய்யும், கெடுதல் செய்யாது. இராசிக்கு 8-11-க்குரியவன் ஆதிக்கத்தில் வருவதால் திருமணம், எதிர்பாரா ஐஸ்வரியம், லாட்டரி, ஷேர் மார்க்கெட்டில் கணிசமான அளவு பண வரவை கொடுக்கும். கூட்டாளிகளால் நன்மை, லாபம் உண்டு. ஜென்மத்தை, பாக்கிய ஸ்தானத்தை, சுகஸ்தானத்தை அதாவது உங்கள் இராசியையும், 9-ம் இடம், 4-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கல்வித்துறையில் கவனம் தேவை. பிரயாணம் செய்யும்போது நிதானம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை. பழைய கடன்கள் தீரும். மேல்படிப்பு தொடர வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு வரும். புதிய நண்பர்களின் உதவியால் தொழில் துவங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். பொதுவாக சப்தம சனி வெற்றியை கொடுக்கும்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை அன்றோ அல்லது உங்கள் நட்சத்திரம் வரும் நாளிலோ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் கருப்பு அல்லது நீல வர்ணத்தில் ஆடை அணிய வேண்டும். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

வருமானத்தைப் பற்றியும், வருங்காலத்தைப் பற்றியும் எந்த நேரமும் சிந்திக்கும் ரிஷப ராசி வாசகர்களே!

குடும்பத்திலுள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் ஏற்படுக்கூடும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கைகூடும். ஆண்டின் தொடக்கம் சற்று சாதகமின்றி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் ஓரளவுக்கு குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங் களைப் பெற்று உயர் பதவிகளைப் பெறுவீர்கள். 5-ல் ராகு சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவு, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இந்த ஆண்டு எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நல்ல அனுகூலமான பலனைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள் மற்றும் பரிகாரம்: பதவி வரும் நேரமிது, திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்யுங்கள், பிரமாதமாக வருவீர்கள்.

அன்புக்குரிய மிதுன  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

80% நல்லதே நடக்கும்: ராஜயோகம், பதவி உயர்வு, சொத்து சேர்க்கை...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு வருகிறார். பொதுவாக இராசிக்கு 3,6,11-ல் சனி அமர்ந்தால் ராஜயோகம் தான். இது ஜோதிட விதி. 7-10-க்குரிய குருவின் ஆதிக்கத்தில் வருவதால், தொழில் துறையில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பாரா கூட்டாளியின் உதவி கிடைக்கும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகமும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் வரலாம். 8-க்குரியவன், 6-ம் இடத்தில் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி கொடுக்கும். விரோதங்கள் மறையும். உடல்நலம் பெறும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். 8-ம் இடத்தை, 12-ம் இடத்தை, 3-ம் இடத்தை பார்வை செய்வதால், வீண் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். மரத்தில் பழம் இருந்தால் கல் எறியத்தான் செய்வார்கள். நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள். தேவையற்ற விரயங்கள் செய்யாதீர்கள். சகோதர, சகோதரி வசம் வீண் விவாதம் வேண்டாம். மேல் அதிகாரி வசம் பணிவு தேவை. சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைப்பெறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். நினைத்த காரியத்தை நடத்தி தந்து, மறைந்த சனி நிறைந்து கொடுப்பார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! விநாயகப் பெருமானை வணங்குங்கள். சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதமோ அல்லது புளியோதரை சாதமோ தானம் செய்யுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

அரிய பல யோசனைகளை அடுத்தவர்களுக்கு எடுத்து வழங்கும் மிதுன ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார் உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல் வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப் பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 4- லிலும், கேது 10-லிலும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: இப்படியும், அப்படியுமாக இருக்கும். வளம் பெற திருப்பதி செல்லுங்கள், பாலாஜி உங்களுக்கு நல்ல ஒரு வழியை சொல்லுவார்

அன்புக்குரிய கடக  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

70% நல்லதே நடக்கும்: புதிய வாகனம், வீடு-மனை, உயர்கல்வி, சிறப்பான தொழில்...
சனி பகவான் உங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் அமரப் போகிறார். 6-9-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், இத்தனை மாதங்களாக செய்த சோதனை போதும், இனி இவர்கள் சாதனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து சனி பகவான் நன்மைகளை செய்யப்போகிறார். வெளிநாட்டு வியாபாரம், வெளிநாட்டு பயணம், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகியவற்றை செய்து வைப்பார். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு மனை வாங்கும் காலமிது. உயர்கல்வி வரும். தடைப்பட்ட தொழில் துவங்கும். நோய் நொடி நீங்கும். பொதுவாக, பஞ்சம சனி நன்மைகளை செய்வார். 2-ம் இடம், 7-ம் இடம், 11-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் கூட்டாளி வசம் கவனம் தேவை. வழக்கு விஷயத்தில் எதிராளியிடம் சுமுகமாக பேசி சாதகமாக்கி கொள்ளுங்கள். தூர பயணம் செய்யும்போது, உடல்நலனில் கவனம் தேவை. மற்றவர்கள் ஆலோசனையை பொறுமையாக கேளுங்கள். பெற்றோர் உதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவில் காரியங்கள் நன்மையாக முடியும். சனிபகவான் சாதகமாக வழி நடத்துவார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் வாசனை மலர்களை பெருமாளுக்கு அணிவித்து வணங்குங்கள்.  நெய் தீபம் ஏற்றுங்கள். புளிச் சாதம் தானம் செய்யுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

அஞ்சாத நெஞ்சமும், அயராத உழைப்பும் கொண்ட கடக ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல்களும் உடல் அசதியும் ஏற்படும். என்றாலும் ராகு 3-ல் சஞ்சரிப்பதாலும், குரு உச்சம் பெற்று சஞ்சரிப்பதாலும் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் நிலை சற்றே மந்தமடைந்தாலும் உங்களின் உழைப்பாற்றலால் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்வடைவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் எளிதில் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. என்றாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தன ஸ்தானத்துக்கு மாறுதலாகிறார். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமும் கிட்டும். கொடுக்கல் வாங்கலும் லாபமளிக்கும். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஊதிய உயர்வுகள் கிடைக்கப்பெறும், தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள் மற்றும் பரிகாரம்: குழப்பங்கள் அதிகரிக்கும், குழம்பவே வேண்டாம். பிள்ளையார்ப்பட்டி கோவில் சென்று விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும். அனைத்து குழப்பங்களும் விலகும்.

அன்புக்குரிய சிம்ம  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

70% நல்லதே நடக்கும்: கஷ்டங்கள் விலகும், ஆனந்தம் பெருகும், தொட்டது துலங்கும்...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் வந்து அமரப் போகிறார். பொதுவாக 4-ம் இடத்தில் சனி அமர்ந்தால், “அர்த்தாஷ்டம சனி என்பார்கள். அர்த்தாஷ்டம சனி நன்மை செய்யாது என்றும் கூறுவார்கள். அது உங்கள் இராசியை பொறுத்தவரையில் இந்த நேரத்தில் உண்மையில்லை. காரணம், 5-8-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், அர்தாஷ்டம சனியாக இருந்தாலும், ஆனந்தத்தை அள்ளி கொடுக்க போகிறார். ஆம். பஞ்சமாதிபதி காலில் வருவதால், கஷ்டங்கள் கடலில் கரைந்தது போல் ஆகும். தொட்டது துலங்கும். பகைவர்கள் அடங்கி விடுவார்கள். கடன், நோய் நொடி அறவே தீரும். பழைய வீடு, புதியதாய் பொலிவு பெரும். கல்வித் தடை நீங்கும். உத்தியோகம், சொந்த தொழில் அமையச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. ஜென்மத்தையும், 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், தேவையற்ற கடன் வேண்டாம். யாரிடத்திலும் விரோதம் வளர்க்க வேண்டாம். அகல கால் வைத்து ஆடம்பர செலவு செய்ய வேண்டாம். சுகஸ்தான சனி சுகமான வாழ்வை தருவார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வையுங்கள். சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். சனிக்கிழமையில் நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

பொது வாழ்வில் புகழ் குவிக்க வேண்டும் என்று விரும்பும் சிம்மராசி வாசகர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத நிலை உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 05-07-2015-க்குப் பிறகு ஜென்ம ராசிக்கு மாறுதலாகிறார். இந்த வருடம் நீங்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. தயாள குணம் கொண்ட நீங்கள் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது, பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டு என்றாலும் அதை சில தடைகளுக்குப் பின்பே பெறமுடியும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாக உங்களின் முன்கோபமே காரணமாக இருக்கும் என்பதால் முன்கோபத்தையும் முரட்டு சுபாவத்தையும் சற்று தளர்த்தி அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களின் மத்தியஸ்தத்திற்கு பலரிடம் நல்ல மதிப்பு உண்டென்றாலும் இந்த வருடம் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட் தேக்கமின்றி லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களின் உதவி ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகித்தாலும் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை. கிரகங்களின் சாதகமற்ற சஞ்சாரத்தால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்:   வெற்றி உண்டாகும். வழக்கருத்தீஸ்வரர்  கோவிலில் ஜென்ம நட்சத்திரத்தில் அர்ச்சனை செய்யவும். ஹஜ்மீர்  தர்காவில் மல்லிகை பூ மாலை போட்டு பிரார்த்தனை செய்யவும். சிங்க பெருமாள் கோவிலுக்கு காணிக்கை செலுத்தவும். வெற்றி நிச்சயம்.

அன்புக்குரிய கன்னி  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

75% நல்லதே நடக்கும்: மண்ணை தொட்டாலும் பொன்னாகும். திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு வருகிறார். 4-7-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வெகு பிரமாதமாக வரப்போகிறார். அன்றுடன்ஏழரை சனி விடுதலை ஆகிறது. கூண்டு பறவை போல் சிக்கி இருந்த நீங்கள், இனி சுதந்திரமாக இருப்பீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் வருவதால், மண்ணை தொட்டாலும் பொன்னாகும். திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் பெருக வாய்ப்பு வரும். குடும்ப சச்சரவு தீரும். தடைபட்ட கட்டட வேலை இனி துவங்கும். 5-ம் இடம், 9-ம் இடம், 12-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், பூர்வீக சொத்தில் வழக்கு பிரச்சனை வரலாம். சொத்து வாங்கும் பொழுது முழு கவனம் தேவை. ஜாமீன் விஷயமாக இருந்தால் தவிர்க்கவும். பெரியவர்களிடம் அடங்கி போவது நன்மை தரும். அவர்கள் வசம் தர்க்கம் செய்ய வேண்டாம். மனைவியால் யோகம் உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். அயல்நாட்டு வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும். கீர்த்தி சனி, வசந்த காற்று வீசச் செய்வார்.  

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! திங்கள் தோறும் சிவபெருமானுக்கு வில்வ இலையை சமர்ப்பித்து வணங்குங்கள். அதே போல சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி இலையை சமர்ப்பிக்கவும். ஊனமுற்ற முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனீஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் வஸ்திரம் அணிவியுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

இனிமையாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி வாசகர்களே!

கடந்த காலங்களில் நடைபெற்ற ஏழரைச்சனி முழுமையாக முடிந்து இந்த 2015-ம் ஆண்டில் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், பொருளாதார ரீதியாக மேன்மையும் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தொழில், வியாபார ரீதியாக மேன்மைமிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானமாகிய 12-ம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், சனி பகவான் 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்து சென்ற உறவினர்கள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்களனைத்தும் குறையும்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: பிரச்சனைகள் உண்டாகும். அவை தீர காளிகாம்பாள் கோவிலில் மாலை சார்த்தி மன நிம்மதி அடையலாம்.

அன்புக்குரிய துலா ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

65% நல்லதே நடக்கும்: வழக்கில் தீர்வு, அரசாங்க உதவி, பெற்றோர் ஆதரவு...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி வருகிறார். ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் கவலை வேண்டாம். 3-6-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போவதாலும், 2-ம் இடத்து சனியை கடகத்தில் இருக்கும் குரு பார்வை செய்வதாலும், பாதகம் அவ்வளவாக இருக்காது. 4-5-க்குரிய, அதாவது சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி சனி நன்மையே செய்வார். பூர்வீக சொத்தில் வழக்கு இருந்தால் தீர்வு கிடைக்கும். கல்வி தடை நீங்கும். மேலதிகாரி உதவி கிடைக்கும். அரசாங்க உதவியும் கிடைக்கும். வங்கி உதவி கிடைக்கும். பெற்றோர் ஆதரவில் நன்மை தேடி வரும். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். குடும்ப செலவுகளும் கூடுதலாக இருக்கும். 4-ம் இடம், 8-ம் இடம், 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வாகன பயணத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது, பேச்சில் கவனம் தேவை. லாபம் வருகிறது என்று வாரி, வாரி செலவு செய்யக்கூடாது. தேவையில்லா செலவால் மற்றவர்களிடம் கடன் கேட்கும் சூழ்நிலை உண்டாக்கி விடும். கவனமாக செயல்பட்டால், முன்னேற்றத்தை தருவார் தன ஸ்தான சனி.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! நல்லெண்ணை தானம் செய்யுங்கள். இரும்பு பொருட்களை தானம் செய்யுங்கள். இல்லத்தில் நல்லெண்ணையுடன் நெய் சேர்த்து தீபம் ஏற்றி மனதால் சனீஸ்வர பகவானை வணங்குங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

நல்ல தகவல்களையே நாளும் கேட்க வேண்டுமென்று விரும்பும் துலாம் ராசி வாசகர்களே!

உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சனைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: சொந்த கட்சியரினராலேயே சூதும் வாதும் ஏற்படலாம். நாமக்கல் ஆஞ்சநேயரை வெற்றிலை மற்றும் வடை மாலை சார்த்தி வழிபட்டால் பிரச்சனைகள் அகலும்

அன்புக்குரிய விருச்சிக ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

65% நல்லதே நடக்கும்: திருமணம், குழந்தைபேறு, சுபநிகழ்ச்சிகள், சொந்த தொழில்...

சனி பகவான் உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் அமரப் போகிறார். “ஐயோ.. ஜென்ம சனியா?” என்று பயப்பட வேண்டாம். 2-5-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி அமர்கிறார். ஆகவே திருமணம், குழந்தைபேறு என்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். சிலர் உத்தியோகம் விட்டு, சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். எதிர்பாரா தனலாபம் கிட்டும். கூட்டாளிகளால் தொழில் ஆதாயம் வரும். சிலருக்கு உறவினர்களால் நன்மை உண்டாகும். பட்டப்படிப்பு தொடரும். பட்ட கஷ்டம் தீரும். தொழில் துவங்குவதற்கு சொத்தை அடமானம் வைக்க நேரும். 3-ம் இடம், 7-ம் இடம், 10-ம் இடங்களை சனிப் பார்வை செய்வதால், தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கும் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி வசம் நிதான பேச்சு அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்ந்து, சொத்துக்கள் கைக்கு வரும். நோய் நொடி தீரும். ஜென்ம சனி மென்மையான வாழ்வு தரும்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி வணங்குங்கள். காக்கைக்கு சனிக்கிழமை தோறும் எள் சாதம் வையுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!

இந்த 2015-ம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்  உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: பதவியை தக்க வைத்து கொள்ள சமயபுரம் மாரியம்மனை மனதார வேண்டுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி அம்மனை மனம் குளிர வையுங்கள்.

அன்புக்குரிய தனுசு  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

70% நல்லதே நடக்கும்: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும், வாக்கு பலிதம் உண்டாகும், மனைவியால் / கணவனால் யோகம் உண்டு...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரப்போகிறார். “ஏழரை சனி பிடித்தது என்று பயம் வேண்டாம். ஜென்ம-சுகாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாகம் நட்சத்திரத்தில் சனி வருவதால், ஏழரை சனி பாதிப்பு ஒன்றும் செய்யாது. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். வாக்கு பலிதம் உண்டாகும். மனைவியால் யோகம் உண்டு. திருமணம் நடைபெற வாய்ப்பு வரும். குடும்பத்தில் சச்சரவு நீங்கும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வரும். பல நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தீரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தொழில் துவங்க வழி பிறக்கும். 2-ம் இடம், 6-ம் இடம், 9-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், கண்களில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு கவனிக்கலாம் என்ற எண்ணம் வேண்டாம். சிறு துளி பெரும் வெள்ளம் என்பது போல் சிறுசிறு கடன்தான் பெரிய பாதகத்தை கொடுக்கும். பெற்றோர், பெரியோர் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அதனால் நன்மை உண்டாகும், திருப்பம் தரும். ஏழரை சனியின் துவக்கமான 12-ம் இட சனி என்று கவலை வேண்டாம்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிகிழமையில் சனீஸ்வர பகவானுக்கு  நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தயிர் சாதத்தை 8 பேருக்காவது கொடுங்கள். நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்..

2015 ஆண்டு பலன்கள்

பதவிக்கு ஆசைப்படாமல் உதவிக்கு ஆசைப்படும் நல்ல உள்ளம் படைத்த தனுசு ராசி வாசகர்களே!

இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி குரு பகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசிக்கு 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பில்லை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களின் உழைப்பாலும் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப் பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ராசியாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் சனியால் ஏற்படும் பிரச்சனைகள் யாவும் ஓரளவுக்கு குறையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒரு சில மன சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: சிறப்பான நேரமிது. மேலும் சிறக்க கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவிலில் நிவேதனம் செய்து சிறப்பு பெறுங்கள்.

அன்புக்குரிய மகர  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

75% நல்லதே நடக்கும்: ராஜயோகம், நினைத்தது  நடக்கும், சச்சரவு தீரும்...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் லாப சனியாக வருகிறார். 12-3-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப் போகிறார். பொதுவாக 3-6-11-ல் சனி அமர்ந்தாலே ராஜயோகம் தான். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். ஜென்ம-தனாதிபதி, 11-ல் இருப்பதால் நினைத்தது நடக்கும். கல்வி முன்னேற்றம், தடைபட்ட சுபகாரியங்கள் அத்தனையும் கைக் கூடும். வரன்கள் தேடி வரும். வீடு, மனை வாகனம் அமையும். செல்வந்தர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிவினை-சச்சரவு தீரும். ஜென்மத்தையும், 5-ம் இடத்தை, 8-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை. சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. வீண் விரோதம் தவிர்க்கவும். ஆடம்பர செலவு குறையுங்கள். நசிந்த தொழில், மீண்டும் புத்துணர்வு பெற வழி பிறக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் நடக்க நல்ல வாய்ப்பு அமையும். லாப சனி யோக சனியே.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஆஞ்சநேயரை வணங்குங்கள். நீலம் அல்லது கருப்பு வஸ்திரத்தை சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அணிவித்து வணங்குங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

நிதானத்தோடு செயல்பட்டால் நினைத்ததை முடிக்கலாம் என்று சொல்லும் மகர ராசி வாசகர்களே!

இந்த ஆண்டில் உங்கள் ராசியாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். ஆண்டுக் கோளான குரு பகவானும் 7-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக் கூடிய வாய்ப்பும், அதனால் லாபமும் அபிவிருத்தியும் பெருகக் கூடிய அமைப்பும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களும் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்பும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் அதாவது ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் குரு பகவான் 8-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்றாலும் சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கமுடியும். சர்ப்ப கிரகங்களான கேது 3-ம் வீட்டிலும், ராகு 9-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்து சென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். சனியின் பலமான சஞ்சாரத்தால் இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: சிறந்த எதிர்காலம் அமைய சித்தர்கள் நிறைந்த திருவண்ணாமலை செல்லுங்கள். வெற்றி  உங்கள்  பக்கமே.

அன்புக்குரிய கும்ப  ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

65% நல்லதே நடக்கும்: தொழில் உயர்வு, உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, புகழ் கூடும்...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். தன-லாபாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி வரப்போவதால், ஒரு தொழிலுக்கு இரண்டு தொழிலாக உயர வாய்ப்பு வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். இது நாள் வரையில் உங்களை புண்படுத்தியவர்கள் புகழ ஆரம்பிப்பார்கள். இனி என்ன செய்வது? என்று குழப்பத்தில் தவித்த நீங்கள், திட்டமிட்ட வாழ்க்கை வாழ ஆரம்பிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் பண இறுக்கம் நீங்கும். தன, தான்யத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உள்ளது. பொதுவாக, பொன்னான நேரமிது. சனி பகவான், 12-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடங்களை பார்வை செய்வதால், இனி திட்டமிட்டு வாழுங்கள். கூட்டாளி வசம், குடும்பத்தார் வசமும் அடங்கி போக வேண்டும் என்றில்லை, ஆனால் அனுசரித்து செல்வது நல்லது. ஜாமீன் விஷயத்தை தவிர்த்து விடுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். சகோதர ஒற்றுமை வளரும். உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும். கடன் சுமை தீரும். 10-ம் இட சனி பகவான், நல்ல யோகத்தை தருவார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சிவபெருமானையும், பெருமாளையும் வணங்குங்கள். ஈசனுக்கு வில்ல இலையும், பெருமாளுக்கு துளசி இலையும் சமர்பித்து வணங்கி வாருங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்

நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகும் கும்ப ராசி வாசகர்களே!

இந்த 2015-ம் ஆண்டு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆண்டுக் கோளான குரு பகவான் ஆண்டின் முற்பாதி வரை ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விட முடியும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும்.

அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: மிக சிறந்த நேரமிது. இதனை உபயோகப்படுத்தி கொள்ளுங்கள். சோளிங்கர் சென்று நரசிம்மரை மனதார வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

அன்புக்குரிய மீன ராசி வாசகர்களே

சனிப்பெயர்ச்சி பலன்கள்

80% நல்லதே நடக்கும்: சுறுசுறுப்பு, வீர நடை, குடும்பத்தில் குதூகலம், வி..பி ஆவீர்கள்...

சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியில் இருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். இனி முடங்கி கொண்டு இருந்த நீங்கள், சுறுசுறுப்புடன் வீர நடை போடுவீர்கள். மனதில் பட்டதை துணிந்து செய்வீர்கள். இது வரை இருந்த பயம் பஞ்சு போல் பறந்து விடும். குடும்பத்தில் குதூகலம் தான். பிள்ளைகளுக்கு திருமணம், சுபசெலவுகள் ஏற்படும். 9-ம் இட சனி, உறவினர் வருகையை அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வெகு ஜோராய் அமையும். வேலை இல்லா திண்டாட்டம் தீரும். வேலையில்லா பட்டதாரிகள், வி..பி. ஆவார்கள். பொன், பொருள் சேரும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. 3-ம் இடம், 6-ம் இடம், 11-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், வீண் விவாதம் வரும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமல் விடுங்கள். வாதம் செய்ய வேண்டாம். விட்டு கொடுத்தவன் கெட்டதாக சரித்திரம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள். மனநிம்மதி உண்டாகும். சொத்து விஷயத்திலும், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கியத்தில் உள்ள சனி பகவான், சகல பாக்கியங்களையும் வாரி கொடுப்பார்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்குங்கள். புளிசாதத்தை மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது தானம் கொடுங்கள். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். சனீஸ்வர பகவான் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் அருளட்டும், எமது ஆசீர்வாதம்.

2015 ஆண்டு பலன்கள்
உதவும் குணத்தாலும், உழைக்கும் கரத்தாலும் உயர்ந்த நிலையை அடையும் மீனராசி வாசகர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டின் முற்பாதியில் உங்கள் ராசியாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். அசையாச் சொத்து வகையில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப் பலன்களையும் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எதிர்பார்த்த லாபத்தினை அடைந்துவிட முடியும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெறுவீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்: பெரும் பதவிகள் வரும் நேரமிது. மகான்களை வழிபட, அவர்கள் உங்களை வழி நடத்துவார்கள்.

No comments:

Post a Comment